Friday, March 17, 2023

Masilamaneeswarar Temple,Thiruvaduthurai – Appar Hymns

Masilamaneeswarar Temple,Thiruvaduthurai – Appar Hymns

Appar (04.056):

மாயிரு ஞால மெல்லாம்

மலரடி வணங்கும் போலும்

பாயிருங் கங்கை யாளைப்

படர்சடை வைப்பர் போலுங்

காயிரும் பொழில்கள் சூழ்ந்த

கழுமல வூரர்க் கம்பொன்

ஆயிரங் கொடுப்பர் போலும்

ஆவடு துறைய னாரே.  1

மடந்தை பாகத்தர் போலும்

மான்மறிக் கையர் போலும்

குடந்தையிற் குழகர் போலுங்

கொல்புலித் தோலர் போலுங்

கடைந்தநஞ் சுண்பர் போலுங்

காலனைக் காய்வர் போலும்

அடைந்தவர்க் கன்பர் போலும்

ஆவடு துறைய னாரே.  2

உற்றநோய் தீர்ப்பர் போலும்

உறுதுணை யாவர் போலுஞ்

செற்றவர் புரங்கள் மூன்றுந்

தீயெழச் செறுவர் போலுங்

கற்றவர் பரவி யேத்தக்

கலந்துலந் தலந்து பாடும்

அற்றவர்க் கன்பர் போலும்

ஆவடு துறைய னாரே.  3

மழுவமர் கையர் போலும்

மாதவள் பாகர் போலும்

எழுநுனை வேலர் போலும்

என்புகொண் டணிவர் போலுந்

தொழுதெழுந் தாடிப் பாடித்

தோத்திரம் பலவுஞ் சொல்லி

அழுமவர்க் கன்பர் போலும்

ஆவடு துறைய னாரே.  4

பொடியணி மெய்யர் போலும்

பொங்குவெண் ணூலர் போலுங்

கடியதோர் விடையர் போலுங்

காமனைக் காய்வர் போலும்

வெடிபடு தலையர் போலும்

வேட்கையாற் பரவுந் தொண்டர்

அடிமையை அளப்பர் போலும்

ஆவடு துறைய னாரே.  5

வக்கரன் உயிரை வவ்வக்

கண்மலர் கொண்டு போற்றச்

சக்கரங் கொடுப்பர் போலுந்

தானவர் தலைவர் போலுந்

துக்கமா மூடர் தம்மைத்

துயரிலே வீழ்ப்பர் போலும்

அக்கரை ஆர்ப்பர் போலும்

ஆவடு துறைய னாரே.  6

விடைதரு கொடியர் போலும்

வெண்புரி நூலர் போலும்

படைதரு மழுவர் போலும்

பாய்புலித் தோலர் போலும்

உடைதரு கீளர் போலும்

உலகமு மாவர் போலும்

அடைபவர் இடர்கள் தீர்க்கும்

ஆவடு துறைய னாரே.  7

முந்திவா னோர்கள் வந்து

முறைமையால் வணங்கி யேத்த

நந்திமா காள ரென்பார்

நடுவுடை யார்கள் நிற்பச்

சிந்தியா தேயொ ழிந்தார்

திரிபுரம் எரிப்பர் போலும்

அந்திவான் மதியஞ் சூடும்

ஆவடு துறைய னாரே.  8

பானமர் ஏன மாகிப்

பாரிடந் திட்ட மாலுந்

தேனமர்ந் தேறும் அல்லித்

திசைமுக முடைய கோவுந்

தீனரைத் தியக் கறுத்த

திருவுரு வுடையர் போலும்

ஆனரை ஏற்றர் போலும்

ஆவடு துறைய னாரே.  9

பார்த்தனுக் கருள்வர் போலும்

படர்சடை முடியர் போலும்

ஏத்துவார் இடர்கள் தீர

இன்பங்கள் கொடுப்பர் போலுங்

கூத்தராய்ப் பாடி யாடிக்

கொடுவலி யரக்கன் றன்னை

ஆர்த்தவாய் அலறு விப்பார்

ஆவடு துறைய னாரே.

Appar (04.057):

மஞ்சனே மணியு மானாய்

மரகதத் திரளு மானாய்

நெஞ்சுளே புகுந்து நின்று

நினைதரு நிகழ்வி னானே

துஞ்சும்போ தாக வந்து

துணையெனக் காகி நின்று

அஞ்சலென் றருள வேண்டும்

ஆவடு துறையு ளானே.  1

நானுகந் துன்னை நாளும்

நணுகுமா கருதி யேயும்

ஊனுகந் தோம்பும் நாயேன்

உள்ளுற ஐவர் நின்றார்

தானுகந் தேயு கந்த

தகவிலாத் தொண்ட னேன்நான்

ஆனுகந் தேறு வானே

ஆவடு துறையு ளானே.  2

கட்டமே வினைக ளான

காத்திவை நோக்கி ஆளாய்

ஒட்டவே ஒட்டி நாளும்

உன்னையுள் வைக்க மாட்டேன்

பட்டவான் தலைகை யேந்திப்

பலிதிரிந் தூர்கள் தோறும்

அட்டமா வுருவி னானே

ஆவடு துறையு ளானே.  3

பெருமைநன் றுடைய தில்லை

யென்றுநான் பேச மாட்டேன்

ஒருமையால் உன்னை உள்கி

உகந்துவா னேற மாட்டேன்

கருமையிட் டாய வூனைக்

கட்டமே கழிக்கின் றேன்நான்

அருமையா நஞ்ச முண்ட

ஆவடு துறையு ளானே.  4

துட்டனாய் வினைய தென்னுஞ்

சுழித்தலை அகப்பட் டேனைக்

கட்டனாய் ஐவர் வந்து

கலக்காமைக் காத்துக் கொள்வாய்

மட்டவிழ் கோதை தன்னை

மகிழ்ந்தொரு பாகம் வைத்து

அட்டமா நாக மாட்டும்

ஆவடு துறையு ளானே.  5

காரழற் கண்ட மேயாய்

கடிமதிற் புரங்கள் மூன்றும்

ஓரழல் அம்பி னாலே

யுகைத்துத்தீ எரிய மூட்டி

நீரழற் சடையு ளானே

நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்

ஆரழல் ஏந்தி யாடும்

ஆவடு துறையு ளானே.  6

செறிவிலேன் சிந்தை யுள்ளே

சிவனடி தெரிய மாட்டேன்

குறியிலேன் குணமொன் றில்லேன்

கூறுமா கூற மாட்டேன்

நெறிபடு மதியொன் றில்லேன்

நினையுமா நினைய மாட்டேன்

அறிவிலேன் அயர்த்துப் போனேன்

ஆவடு துறையு ளானே.  7

கோலமா மங்கை தன்னைக்

கொண்டொரு கோல மாய

சீலமே அறிய மாட்டேன்

செய்வினை மூடி நின்று

ஞாலமாம் இதனுள் என்னை

நைவியா வண்ணம் நல்காய்

ஆலமா நஞ்ச முண்ட

ஆவடு துறையு ளானே.  8

நெடியவன் மலரி னானும்

நேர்ந்திரு பாலும் நேடக்

கடியதோர் உருவ மாகிக்

கனலெரி யாகி நின்ற

வடிவின வண்ண மென்றே

என்றுதாம் பேச லாகார்

அடியனேன் நெஞ்சி னுள்ளார்

ஆவடு துறையு ளானே.  9

மலைக்குநே ராய ரக்கன்

சென்றுற மங்கை அஞ்சத்

தலைக்குமேற் கைக ளாலே

தாங்கினான் வலியை மாள

உலப்பிலா விரலால் ஊன்றி

ஒறுத்தவற் கருள்கள் செய்து

அலைத்தவான் கங்கை சூடும்

ஆவடு துறையு ளானே.

Appar (05.029):

நிறைக்க வாலியள்

அல்லளிந் நேரிழை

மறைக்க வாலியள்

அல்லளிம் மாதராள்

பிறைக்க வாலப்

பெரும்புனல் ஆவடு

துறைக்க வாலியோ

டாடிய சுண்ணமே.  1

தவள மாமதிச்

சாயலோர் சந்திரன்

பிளவு சூடிய

பிஞ்ஞகன் எம்மிறை

அளவு கண்டிலள்

ஆவடு தண்டுறைக்

களவு கண்டனள்

ஒத்தனள் கன்னியே.  2

பாதி பெண்ணொரு

பாகத்தன் பன்மறை

ஓதி யென்னுளங்

கொண்டவன் ஒண்பொருள்

ஆதி ஆவடு

தண்டுறை மேவிய

சோதி யேசுட

ரேயென்று சொல்லுமே.  3

கார்க்கொள் மாமுகில்

போல்வதோர் கண்டத்தன்

வார்க்கொள் மென்முலை

சேர்ந்திறு மாந்திவள்

ஆர்க்கொள் கொன்றையன்

ஆவடு தண்டுறைத்

தார்க்கு நின்றிவள்

தாழுமா காண்மினே.  4

கருகு கண்டத்தன்

காய்கதிர்ச் சோதியன்

பருகு பாலமு

தேயென்னும் பண்பினன்

அருகு சென்றிலள்

ஆவடு தண்டுறை

ஒருவன் என்னை

யுடையகோ வென்னுமே.  5

குழலுங் கொன்றையுங்

கூவிள மத்தமுந்

தழலுந் தையலோர்

பாகமாத் தாங்கினான்

அழகன் ஆவடு

தண்டுறை யாவெனக்

கழலுங் கைவளை

காரிகை யாளுக்கே.  6

பஞ்சின் மெல்லடிப்

பாவையோர் பங்கனைத்

தஞ்ச மென்றிறு

மாந்திவ ளாரையும்

அஞ்சு வாளல்லள்

ஆவடு தண்டுறை

மஞ்ச னோடிவள்

ஆடிய மையலே.  7

பிறையுஞ் சூடிநற்

பெண்ணோடா ணாகிய

நிறையு நெஞ்சமும்

நீர்மையுங் கொண்டவன்

அறையும் பூம்பொழில்

ஆவடு தண்டுறை

இறைவன் என்னை

யுடையவன் என்னுமே.  8

வையந் தானளந்

தானும் அயனுமாய்

மெய்யைக் காணலுற்

றார்க்கழ லாயினான்

ஐயன் ஆவடு

தண்டுறை யாவெனக்

கையில் வெள்வளை

யுங்கழல் கின்றதே.  9

பக்கம் பூதங்கள்

பாடப் பலிகொள்வான்

மிக்க வாளரக்

கன்வலி வீட்டினான்

அக்க ணிந்தவன்

ஆவடு தண்டுறை

நக்கன் என்னுமிந்

நாணிலி காண்மினே.

Appar (06.046):

நம்பனை நால்வேதங் கரைகண் டானை

ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்

கம்பனைக் கல்லா லிருந்தான் தன்னைக்

கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்

செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத்

திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை

அம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.  1

மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை

வெண்முகிலாய் எழுந்துமழை பொழிவான் தன்னைத்

தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்

தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி

என்னானை யெந்தை பெருமான் தன்னை

இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே

அன்னானை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.  2

பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப்

பவளக் கொழுந்தினை மாணிக் கத்தின்

தொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச்

சொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகி

வித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை

வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்

அத்தனை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.  3

பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப்

பித்தராம் அடியார்க்கு முத்தி காட்டும்

ஏணியை யிடர்க்கடலுட் சுழிக்கப் பட்டிங்

கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்குந்

தோணியைத் தொண்டனேன் தூய சோதிச்

சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்

ஆணியை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.  4

ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை

உதயத்தி னுச்சியை உருமா னானைப்

பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப்

பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்

திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித்

தீங்கரும்பி னின்சுவையைத் திகழுஞ் சோதி

அருமணியை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.  5

ஏற்றானை யெண்டோ ளுடையான் தன்னை

யெல்லி நடமாட வல்லான் தன்னைக்

கூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக்

குரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் தன்னை

நீற்றானை நீளரவொன் றார்த்தான் தன்னை

நீண்ட சடை முடிமேல் நீரார் கங்கை

ஆற்றானை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.  6

கைம்மான மதகளிற்றை உரித்தான் தன்னைக்

கடல்வரைவா னாகாச மானான் தன்னைச்

செம்மானப் பவளத்தைத் திகழும் முத்தைத்

திங்களை ஞாயிற்றைத் தீயா னானை

எம்மானை என்மனமே கோயி லாக

இருந்தானை என்புருகும் அடியார் தங்கள்

அம்மானை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.  7

மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை

வெள்ளடையைத் தண்ணிழலை வெந்தீ யேந்துங்

கையானைக் காமனுடல் வேவக் காய்ந்த

கண்ணானைக் கண்மூன் றுடையான் தன்னைப்

பையா டரவமதி யுடனே வைத்த

சடையானைப் பாய்புலித்தோ லுடையான் தன்னை

ஐயானை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.  8

வேண்டாமை வேண்டுவது மில்லான் தன்னை

விசயனைமுன் னசைவித்த வேடன் தன்னைத்

தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச்

சூலப் படையானைக் காலன் வாழ்நாள்

மாண்டோட வுதைசெய்த மைந்தன் தன்னை

மண்ணவரும் விண்ணவரும் வணங்கி யேத்தும்

ஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.  9

பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப்

பாடலோ டாடல் பயின்றான் தன்னைக்

கொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக்

கோலமா நீல மிடற்றான் தன்னைச்

செந்தமிழோ டாரியனைச் சீரி யானைத்

திருமார்பிற் புரிவெண்ணூல் திகழப் பூண்ட

அந்தணனை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.  10

தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் தன்னைத்

தக்கன்றன் பெருவேள்வி தகர்த்தான் தன்னைப்

பிரித்தானைப் பிறைதவழ்செஞ் சடையி னானைப்

பெருவலியால் மலையெடுத்த அரக்கன் தன்னை

நெரித்தானை நேரிழையாள் பாகத் தானை

நீசனேன் உடலுறு நோயான தீர

அரித்தானை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.  11

Appar (06.047):

திருவேயென் செல்வமே தேனே வானோர்

செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க

உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்

உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற

கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்

கருமணியே மணியாடு பாவாய் காவாய்

அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.  1

மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின்

மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்

ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன்

எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்

மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு

வேதனைக்கே யிடங்கொடுத்து நாளு நாளும்

ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.  2

வரையார் மடமங்கை பங்கா கங்கை

மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம்

உரையா உயிர்போகப் பெறுவே னாகில்

உறுநோய்வந் தெத்தனையு முற்றா லென்னே

கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக்

காதலித்து நின்கழலே யேத்து மன்பர்க்

கரையா அடியேனை அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.  3

சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச்

சிலைவளைவித் துமையவளை யஞ்ச நோக்கிச்

கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங்

களிறுரித்த கங்காளா எங்கள் கோவே

நிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும்

நில்லா வுயிரோம்பு நீத னேநான்

அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.  4

நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி

நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித்

துறவாத துன்பந் துறந்தேன் தன்னைத்

சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னெ

உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட

ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்ட

அறவா அடியேனை அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.  5

கோன்நா ரணன் அங்கத் தோள்மேற் கொண்டு

கொழுமலரான் தன்சிரத்தைக் கையி லேந்திக்

கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக்

கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்

நானார் உமக்கோர் வினைக்கே டனேன்

நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னே

ஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.  6

உழையுரித்த மானுரிதோ லாடை யானே

உமையவள்தம் பெருமானே இமையோர் ஏறே

கழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா

கயிலாய மலையானே உன்பா லன்பர்

பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன்

கடனன்றே பேரருளுன் பால தன்றே

அழையுறுத்து மாமயில்க ளாலுஞ் சோலை

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.  7

உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோ

ருலகம் பலிதிரிவாய் உன்பா லன்பு

கலந்தார் மனங்கவருங் காத லானே

கனலாடுங் கையவனே ஐயா மெய்யே

மலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய

மயக்குளே விழுந்தழுந்தி நாளும் நாளும்

அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.  8

பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப்

பசுவேறி யூரூரன் பலிகொள் வானே

கல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங்

கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில்

எல்லாரு மெந்தன்னை யிகழ்வர் போலும்

ஏழையமண் குண்டர்சாக் கியர்களொன்றுக்

கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.  9

துறந்தார்தந் தூநெறிக்கண் சென்றே னல்லேன்

துணைமாலை சூட்டநான் தூயே னல்லேன்

பிறந்தேன்நின் திருவருளே பேசி னல்லாற்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் தன்னைச்

செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்

அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.  10