Friday, December 30, 2022

Kalyana Sundareswarar Temple, Tiruvelvikudi – Sundarar Hymns

Kalyana Sundareswarar Temple, Tiruvelvikudi – Sundarar Hymns

Sundarar (07.074):

மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி

வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்

அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்

அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்

சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை

என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை.  1

கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்

கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி

மாடுமா கோங்கமே மருதமே பொருது

மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி

ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்

பழவினை உள்ளன பற்றறுத் தானை.  2

கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்

கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப்

புல்கியுந் தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும்

போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்

செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத்

தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை.  3

பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும்

பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக்

கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்

கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்

எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை

அருவினை உள்ளன ஆசறுத் தானை.  4

பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும்

பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி

இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி

எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே

சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை

உற்றநோய் இற்றையே உறவொழித் தானை.  5

புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும்

பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி

அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி

ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித்

திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை

இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை.  6

வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்

வருடியும் வணக்கியும் மராமரம் பொருது

கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்

காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்

விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை

உலகறி பழவினை அறவொழித் தானை.  7

ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப்

புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக்

காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்

கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித்

தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை

அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை.  8

புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்

பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப

இலங்குமார் முத்தினோ டினமணி இடறி

இருகரைப் பெருமரம் பீழ்ந்துகொண் டெற்றிக்

கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை

மேலைநோய் இம்மையே வீடுவித் தானை.  9

மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி

மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற

அங்கையான் கழலடி அன்றிமற் றறியான்

அடியவர்க் கடியவன் தொழுவனா ரூரன்

கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல்

தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார்

தவநெறி சென்றம ருலகம்ஆள் பவரே.  10

Sundarar (07.018):

மூப்பதும் இல்லை பிறப்பதும்

இல்லை இறப்பதில்லை

சேர்ப்பது காட்டகத் தூரினு

மாகச்சிந் திக்கினல்லாற்

காப்பது வேள்விக் குடிதண்

துருத்தியெங் கோன்அரைமேல்

ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.  1

கட்டக்காட் டில்நட மாடுவர்

யாவர்க்குங் காட்சியொண்ணார்

சுட்டவெண் ணீறணிந் தாடுவர்

பாடுவர் தூயநெய்யால்

வட்டக்குண் டத்தில் எரிவளர்த்

தோம்பி மறைபயில்வார்

அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.  2

பேருமோர் ஆயிரம் பேருடை

யார்பெண்ணோ டாணுமல்லர்

ஊரும தொற்றியூர் மற்றையூர்

பெற்றவா நாமறியோம்

காருங் கருங்கடல் நஞ்சமு

துண்டுகண் டங்கறுத்தார்க்

காரம்பாம் பாவ தறிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.  3

ஏனக்கொம் பும்மிள ஆமையும்

பூண்டங்கோர் ஏறுமேறிக்

கானக்காட் டிற்றொண்டர் கண்டன

சொல்லியுங் காமுறவே

மானைத்தோல் ஒன்றை உடுத்துப்

புலித்தோல் பியற்குமிட்டு

யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.  4

ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர்

ஊரிடு பிச்சையல்லாற்

பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர்

ஏறியோர் பூதந்தம்பாற்

பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ

றும்பல பாம்புபற்றி

ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.  5

குறவனார் தம்மகள் தம்மக

னார்மண வாட்டிகொல்லை

மறவனா ராயங்கோர் பன்றிப்பின்

போவது மாயங்கண்டீர்

இறைவனார் ஆதியார் சோதிய

ராயங்கோர் சோர்வுபடா

அறவனார் ஆவத றிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.  6

பித்தரை ஒத்தொரு பெற்றியர்

நற்றவை என்னைப்பெற்ற

முற்றவை தம்மனை தந்தைக்குந்

தவ்வைக்குந் தம்பிரானார்

செத்தவர் தந்தலை யிற்பலி

கொள்வதே செல்வமாகில்

அத்தவம் ஆவத றிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.  7

உம்பரான் ஊழியான் ஆழியான்

ஓங்கி மலருறைவான்

தம்பரம் அல்லவர் சிந்திப்ப

வர்தடு மாற்றறுப்பார்

எம்பரம் அல்லவர் என்னெஞ்சத்

துள்ளும் இருப்பதாகில்

அம்பரம் ஆவத றிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.  8

இந்திர னுக்கும் இராவண

னுக்கும் அருள்புரிந்தார்

மந்திரம் ஓதுவர் மாமறை

பாடுவர் மான்மறியர்

சிந்துரக் கண்ணனும் நான்முக

னும்முட னாய்த்தனியே

அந்தரஞ் செல்வத றிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.  9

கூடலர் மன்னன் குலநாவ

லூர்க்கோன் நலத்தமிழைப்

பாடவல் லபர மன்னடி

யார்க்கடி மைவழுவா

நாடவல் லதொண்டன் ஆரூரன்

ஆட்படு மாறுசொல்லிப்

பாடவல் லார்பர லோகத்

திருப்பது பண்டமன்றே.  10