Friday, May 26, 2023

Swetharanyeswarar Temple, Thiruvenkadu – Appar Hymns

Swetharanyeswarar Temple, Thiruvenkadu – Appar Hymns

05.049:

பண்காட் டிப்படி

யாயதன் பத்தர்க்குக்

கண்காட் டிக்கண்ணில்

நின்ற மணியொக்கும்

பெண்காட் டிப்பிறைச்

சென்னிவைத் தான்றிரு

வெண்காட் டையடைந்

துய்ம்மட நெஞ்சமே.  1

கொள்ளி வெந்தழல்

வீசிநின் றாடுவார்

ஒள்ளி யகணஞ்

சூழுமை பங்கனார்

வெள்ளி யன்கரி

யன்பசு வேறிய

தெள்ளி யன்றிரு

வெண்கா டடைநெஞ்சே.  2

ஊனோக் குமின்பம்

வேண்டி யுழலாதே

வானோக் கும்வழி

யாவது நின்மினோ

தானோக் குந்தன்

னடியவர் நாவினில்

தேனோக் குந்திரு

வெண்கா டடைநெஞ்சே.  3

பருவெண் கோட்டுப்பைங்

கண்மத வேழத்தின்

உருவங் காட்டிநின்

றானுமை அஞ்சவே

பெருவெண் காட்டிறை

வன்னுறை யும்மிடந்

திருவெண் காடடைந்

துய்ம்மட நெஞ்சமே.  4

பற்ற வன்கங்கை

பாம்பு மதியுடன்

உற்ற வன்சடை

யானுயர் ஞானங்கள்

கற்ற வன்கய

வர்புரம் ஓரம்பால்

செற்ற வன்றிரு

வெண்கா டடைநெஞ்சே.  5

கூடி னானுமை

யாளொரு பாகமாய்

வேட னாய்விச

யற்கருள் செய்தவன்

சேட னார்சிவ

னார்சிந்தை மேயவெண்

காட னாரடி

யேஅடை நெஞ்சமே.  6

தரித்த வன்கங்கை

பாம்பு மதியுடன்

புரித்த புன்சடை

யான்கய வர்புரம்

எரித்த வன்மறை

நான்கினோ டாறங்கம்

விரித்த வன்னுறை

வெண்கா டடைநெஞ்சே.  7

பட்டம் இண்டை

யவைகொடு பத்தர்கள்

சிட்டன் ஆதிஎன்

றுசிந்தை செய்யவே

நட்ட மூர்த்திஞா

னச்சுட ராய்நின்ற

அட்ட மூர்த்திதன்

வெண்காடு அடைநெஞ்சே.  8

ஏன வேடத்தி

னானும் பிரமனும்

தான வேடமுன்

தாழ்ந்தறி கின்றிலா

ஞான வேடன்

விசயற்கு அருள்செயும்

கான வேடன்றன்

வெண்காடு அடைநெஞ்சே.  9

பாலை யாடுவர்

பன்மறை ஒதுவர்

சேலை யாடிய

கண்ணுமை பங்கனார்

வேலை யார்விடம்

உண்டவெண் காடர்க்கு

மாலை யாவது

மாண்டவர் அங்கமே.  10

இராவ ணம் செய

மாமதி பற்றவை

இராவ ணம்உடை

யான்றனை உள்குமின்

இராவ ணன்றனை

ஊன்றி அருள்செய்த

இராவ ணன் திரு

வெண்காடு அடைமினே.

06.035:

தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்

சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்

பூண்டு பொறியரவங் காதிற் பெய்து

பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்

நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி

நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்

வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி

வெண்காடு மேவிய விகிர்த னாரே.  1

பாதந் தரிப்பார்மேல் வைத்த பாதர்

பாதாள மேழுருவப் பாய்ந்த பாதர்

ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்

ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்

ஓதத் தொலிமடங்கி யூருண் டேறி

ஒத்துலக மெல்லா மொடுங்கி யபின்

வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்

வெண்காடு மேவிய விகிர்த னாரே.  2

நென்னலையோர் ஓடேந்திப் பிச்சைக் கென்று

வந்தார்க்கு வந்தேனென் றில்லே புக்கேன்

அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார்

அருகே வருவார்போல் நோக்கு கின்றார்

நுந்நிலைமை யேதோநும் மூர்தா னேதோ

என்றேனுக் கொன்றாகச் சொல்ல மாட்டார்

மென்முலையார் கூடி விரும்பி யாடும்

வெண்காடு மேவிய விகிர்த னாரே.  3

ஆகத் துமையடக்கி ஆறு சூடி

ஐவா யரவசைத்தங் கானே றேறிப்

போகம் பலவுடைத்தாய்ப் பூதஞ் சூழப்

புலித்தோ லுடையாப் புகுந்து நின்றார்

பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்

பரிசழித்தென் வளைகவர்ந்தார் பாவி யேனை

மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த

வெண்காடு மேவிய விகிர்த னாரே.  4

கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங்

கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட

உள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல

உழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன்

கள்ள விழிவிழிப்பார் காணாக் கண்ணாற்

கண்ணுளார் போலே கரந்து நிற்பர்

வெள்ளச் சடைமுடியர் வேத நாவர்

வெண்காடு மேவிய விகிர்த னாரே.  5

தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச்

சுடர்க்கொன்றைத் தாரணிந்து சுவைகள் பேசிப்

பட்டிவெள் ளேறேறிப் பலியுங் கொள்ளார்

பார்ப்பாரைப் பரிசழிப்பா ரொக்கின் றாராற்

கட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக்

கருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை

விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர்

வெண்காடு மேவிய விகிர்த னாரே.  6

பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கைக்

கோள்நாகம் பூண்பனவும் நாணாஞ் சொல்லார்

உண்பா ருறங்குவார் ஒவ்வா நங்காய்

உண்பதுவும் நஞ்சன்றே ஓவி யுண்ணார்

பண்பா லவிர்சடையர் பற்றி நோக்கிப்

பாலைப் பரிசழியப் பேசு கின்றார்

விண்பால் மதிசூடி வேத மோதி

வெண்காடு மேவிய விகிர்த னாரே.  7

மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு

வானவரும் மாலயனுங் கூடித் தங்கள்

சுருதங்க ளாற்றுதித்துத் தூநீ ராட்டித்

தோத்திரங்கள் பலசொல்லித் தூபங் காட்டிக்

கருதுங்கொல் எம்பெருமான் செய்குற் றேவல்

என்பார்க்கு வேண்டும் வரங் கொடுத்து

விகிர்தங்க ளாநடப்பர் வெள்ளே றேறி

வெண்காடு மேவிய விகிர்த னாரே.  8

புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங்

காணார் பொறியழலாய் நின்றான் றன்னை

உள்ளானை யொன்றல்லா உருவி னானை

உலகுக் கொருவிளக்காய் நின்றான் றன்னைக்

கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும்

ஓவாமே நின்று தவங்கள் செய்த

வெள்ளானை வேண்டும் வரங் கொடுப்பார்

வெண்காடு மேவிய விகிர்த னாரே.  9

மாக்குன் றெடுத்தோன்றன் மைந்த னாகி

மாவேழம் வில்லா மதித்தான் றன்னை

நோக்குந் துணைத்தேவ ரெல்லாம் நிற்க

நொடிவரையில் நோவ விழித்தான் றன்னைக்

காக்குங் கடலிலங்கைக் கோமான் றன்னைக்

கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி

வீக்கந் தவிர்த்த விரலார் போலும்

வெண்காடு மேவிய விகிர்த னாரே.  10