Friday, September 17, 2021

Brahmapureeswarar Temple, Thirukkuvalai – Sundarar Hymns

Brahmapureeswarar Temple, Thirukkuvalai – Sundarar Hymns

07.020:

நீள நினைந்தடி யேனுமை

நித்தலுங் கைதொழுவேன்

வாளன கண்மட வாளவள்

வாடி வருந்தாமே

கோளிலி எம்பெரு மான்குண்டை

யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

ஆளிலை எம்பெரு மானவை

அட்டித் தரப்பணியே.  1

வண்டம ருங்குழ லாளுமை

நங்கையோர் பங்குடையாய்

விண்டவர் தம்புர மூன்றெரி

செய்தவெம் வேதியனே

தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்

கோளிலி எம்பெருமான்

அண்டம தாயவ னேயவை

அட்டித் தரப்பணியே.  2

பாதியோர் பெண்ணைவைத் தாய்பட

ருஞ்சடைக் கங்கைவைத்தாய்

மாதர்நல் லார்வருத் தம்மது

நீயும் அறிதியன்றே

கோதில் பொழில்புடை சூழ்குண்டை

யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

ஆதியே அற்புத னேயவை

அட்டித் தரப்பணியே.  3

சொல்லுவ தென்னுனை நான்தொண்டை

வாயுமை நங்கையைநீ

புல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு

பூசல்செய் தாருளரோ

கொல்லை வளம்புற விற்குண்டை

யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

அல்லல் களைந்தடி யேற்கவை

அட்டித் தரப்பணியே.  4

முல்லை முறுவல் உமையொரு

பங்குடை முக்கணனே

பல்லயர் வெண்டலை யிற்பலி

கொண்டுழல் பாசுபதா

கொல்லை வளம்புற விற்றிருக்

கோளிலி எம்பெருமான்

அல்லல் களைந்தடி யேற்கவை

அட்டித் தரப்பணியே.  5

குரவம ருங்குழ லாளுமை

நங்கையோர் பங்குடையாய்

பரவை பசிவருத் தம்மது

நீயும் அறிதியன்றே

குரவம ரும்பொழில் சூழ்குண்டை

யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

அரவ மசைத்தவ னேயவை

அட்டித் தரப்பணியே.  6

எம்பெரு மானுனை யேநினைந்

தேத்துவன் எப்பொழுதும்

வம்பம ருங்குழ லாளொரு

பாகம மர்ந்தவனே

செம்பொனின் மாளிகை சூழ்திருக்

கோளிலி எம்பெருமான்

அன்பது வாயடி யேற்கவை

அட்டித் தரப்பணியே.  7

அரக்கன் முடிகரங் கள்அடர்த்

திட்டவெம் மாதிபிரான்

பரக்கும் அரவல்கு லாள்பர

வையவள் வாடுகின்றாள்

குரக்கினங் கள்குதி கொள்குண்டை

யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

இரக்கம தாயடி யேற்கவை

அட்டித் தரப்பணியே.  8

பண்டைய மால்பிர மன்பறந்

தும்மிடந் தும்மயர்ந்துங்

கண்டில ராயவர் கள்கழல்

காண்பரி தாயபிரான்

தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்

கோளிலி எம்பெருமான்

அண்டம தாயவ னேயவை

அட்டித் தரப்பணியே.  9

கொல்லை வளம்புற விற்றிருக்

கோளிலி மேயவனை

நல்லவர் தாம்பர வுந்திரு

நாவல வூரனவன்

நெல்லிட ஆட்கள்வேண் டிநினைந்

தேத்திய பத்தும்வல்லார்

அல்லல் களைந்துல கின்அண்டர்

வானுல காள்பவரே.  10