Sunday, November 17, 2019

Ekambareswarar Temple, Kanchipuram – Appar Thevaram Hymns

Ekambareswarar Temple, Kanchipuram – Appar Thevaram Hymns
04.007:
கரவாடும் வன்னெஞ்சர்க்
கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை
விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ
அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை
என்மனத்தே வைத்தேனே.  1
தேனோக்குங் கிளிமழலை
உமைகேள்வன் செழும்பவளந்
தானோக்குந் திருமேனி
தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர்
சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை
என்மனத்தே வைத்தேனே.  2
கைப்போது மலர்தூவிக்
காதலித்து வானோர்கள்
முப்போதும் முடிசாய்த்துத்
தொழநின்ற முதல்வனை
அப்போது மலர்தூவி
ஐம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை
என்மனத்தே வைத்தேனே.  3
அண்டமாய் ஆதியாய்
அருமறையோ டைம்பூதப்
பிண்டமாய் உலகுக்கோர்
பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்
தொண்டர்தாம் மலர்தூவிச்
சொன்மாலை புனைகின்ற
இண்டைசேர் சடையானை
என்மனத்தே வைத்தேனே.  4
ஆறேறு சடையானை
ஆயிரம்பே ரம்மானைப்
பாறேறு படுதலையிற்
பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி
நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை
என்மனத்தே வைத்தேனே.  5
தேசனைத் தேசங்கள்
தொழநின்ற திருமாலாற்
பூசனைப் பூசனைகள்
உகப்பானைப் பூவின்கண்
வாசனை மலைநிலநீர்
தீவளிஆ காசமாம்
ஈசனை எம்மானை
என்மனத்தே வைத்தேனே.  6
நல்லானை நல்லான
நான்மறையோ டாறங்கம்
வல்லானை வல்லார்கள்
மனத்துறையும் மைந்தனைச்
சொல்லானைச் சொல்லார்ந்த
பொருளானைத் துகளேதும்
இல்லானை எம்மானை
என்மனத்தே வைத்தேனே.  7
விரித்தானை நால்வர்க்கு
வெவ்வேறு வேதங்கள்
புரித்தானைப் பதஞ்சந்திப்
பொருளுருவாம் புண்ணியனைத்
தரித்தானைக் கங்கைநீர்
தாழ்சடைமேல் மதில்மூன்றும்
எரித்தானை எம்மானை
என்மனத்தே வைத்தேனே.  8
ஆகம்பத் தரவணையான்
அயன்அறிதற் கரியானைப்
பாகம்பெண் ணாண்பாக
மாய்நின்ற பசுபதியை
மாகம்ப மறையோதும்
இறையானை மதிற்கச்சி
ஏகம்ப மேயானை
என்மனத்தே வைத்தேனே.  9
அடுத்தானை உரித்தானை
அருச்சுனற்குப் பாசுபதங்
கொடுத்தானைக் குலவரையே
சிலையாகக் கூரம்பு
தொடுத்தானைப் புரமெரியச்
சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை
என்மனத்தே வைத்தேனே. 10
04.044:
நம்பனை நகர மூன்றும்
எரியுண வெருவ நோக்கும்
அம்பனை அமுதை யாற்றை
அணிபொழிற் கச்சி யுள்ளே
கம்பனைக் கதிர்வெண் திங்கட்
செஞ்சடைக் கடவுள் தன்னைச்
செம்பொனைப் பவளத் தூணைச்
சிந்தியா எழுகின் றேனே.  1
ஒருமுழம் உள்ள குட்டம்
ஒன்பது துளையு டைத்தாய்
அரைமுழம் அதன் அகலம்
அதனில்வாழ் முதலை ஐந்து
பெருமுழை வாய்தல் பற்றிக்
கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழும் மாடக்
கச்சியே கம்ப னீரே.  2
மலையினார் மகளோர் பாக
மைந்தனார் மழுவொன் றேந்திச்
சிலையினால் மதில்கள் மூன்றுந்
தீயெழச் செற்ற செல்வர்
இலையினார் சூலம் ஏந்தி
ஏகம்பம் மேவி னாரைத்
தலையினால் வணங்க வல்லார்
தலைவர்க்குந் தலைவர் தாமே.  3
பூத்தபொற் கொன்றை மாலை
புரிசடைக் கணிந்த செல்வர்
தீர்த்தமாங் கங்கை யாளைத்
திருமுடி திகழ வைத்து
ஏத்துவார் ஏத்த நின்ற
ஏகம்பம் மேவி னாரை
வாழ்த்துமா றறிய மாட்டேன்
மால்கொடு மயங்கி னேனே.  4
மையினார் மலர்நெ டுங்கண்
மங்கையோர் பங்க ராகிக்
கையிலோர் கபாலம் ஏந்திக்
கடைதொறும் பலிகொள் வார்தாம்
எய்வதோர் ஏனம் ஓட்டி
ஏகம்பம் மேவி னாரைக்
கையினாற் றொழவல் லார்க்குக்
கடுவினை களைய லாமே.  5
தருவினை மருவுங் கங்கை
தங்கிய சடையன் எங்கள்
அருவினை அகல நல்கும்
அண்ணலை அமரர் போற்றுந்
திருவினைத் திருவே கம்பஞ்
செப்பிட உறைய வல்ல
உருவினை உருகி ஆங்கே
உள்ளத்தால் உகக்கின் றேனே.  6
கொண்டதோர் கோல மாகிக்
கோலக்கா வுடைய கூத்தன்
உண்டதோர் நஞ்ச மாகில்
உலகெலாம் உய்ய உண்டான்
எண்டிசை யோரும் ஏத்த
நின்றஏ கம்பன் றன்னைக்
கண்டுநான் அடிமை செய்வான்
கருதியே திரிகின் றேனே.  7
படமுடை அரவி னோடு
பனிமதி யதனைச் சூடிக்
கடமுடை யுரிவை மூடிக்
கண்டவர் அஞ்ச அம்ம
இடமுடைக் கச்சி தன்னுள்
ஏகம்பம் மேவி னான்றன்
நடமுடை யாடல் காண
ஞாலந்தான் உய்ந்த வாறே.  8
பொன்றிகழ் கொன்றை மாலை
பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியிற் புகுந்தெ னுள்ளம்
மெள்ளவே நவில நின்று
குன்றியில் அடுத்த மேனிக்
குவளையங் கண்டர் எம்மை
இன்றுயில் போது கண்டார்
இனியர்ஏ கம்ப னாரே.  9
துருத்தியார் பழனத் துள்ளார்
தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார்
அவரவர்க் கருள்கள் செய்தே
எருத்தினை இசைய ஏறி
ஏகம்பம் மேவி னார்க்கு
வருத்திநின் றடிமை செய்வார்
வல்வினை மாயு மன்றே.  10
04.099:
ஓதுவித் தாய்முன் அறவுரை
காட்டி அமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி
தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக்
கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாய்உகப் பாய்முனி
வாய்கச்சி யேகம்பனே.  1
எத்தைக்கொண் டெத்தகை ஏழை
அமணொ டிசைவித்தெனைக்
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு
வித்தென்னக் கோகுசெய்தாய்
முத்தின் திரளும் பளிங்கினிற்
சோதியும் மொய்பவளத்
தொத்தினை யேய்க்கும் படியாய்
பொழிற்கச்சி யேகம்பனே.  2
மெய்யம்பு கோத்த விசயனோ
டன்றொரு வேடுவனாய்ப்
பொய்யம்பெய் தாவ மருளிச்செய்
தாய்புர மூன்றெரியக்
கையம்பெய் தாய்நுன் கழலடி
போற்றாக் கயவர்நெஞ்சிற்
குய்யம்பெய் தாய்கொடி மாமதில்
சூழ்கச்சி யேகம்பனே.  3
குறிக்கொண் டிருந்துசெந் தாமரை
ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற
மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை
வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங்
காஞ்சியெம் பிஞ்ஞகனே.  4
உரைக்குங் கழிந்திங் குணர்வரி
யான்உள்கு வார்வினையைக்
கரைக்கு மெனக்கை தொழுவதல்
லாற்கதி ரோர்களெல்லாம்
விரைக்கொண் மலரவன் மால்எண்
வசுக்கள்ஏ காதசர்கள்
இரைக்கும் அமிர்தர்க் கறியவொண்
ணானெங்கள் ஏகம்பனே.  5
கருவுற்ற நாள்முத லாகவுன்
பாதமே காண்பதற்கு
உருகிற்றென் னுள்ளமும் நானுங்
கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால
வாயா திருவாரூரா
ஒருபற் றிலாமையுங் கண்டிரங்
காய்கச்சி யேகம்பனே.  6
அரிஅயன் இந்திரன் சந்திரா
தித்தர் அமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை
யார்உணங் காக்கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக
முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை ஏகம்ப
என்னோ திருக்குறிப்பே.  7
பாம்பரைச் சேர்த்திப் படருஞ்
சடைமுடிப் பால்வண்ணனே
கூம்பலைச் செய்த கரதலத்
தன்பர்கள் கூடிப்பன்னாள்
சாம்பலைப் பூசித் தரையிற்
புரண்டுநின் றாள்சரணென்
றேம்பலிப் பார்கட் கிரங்குகண்
டாய்கச்சி யேகம்பனே.  8
ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு
மானினி யல்லமென்னிற்
சான்றுகண் டாய்இவ் வுலகமெல்
லாந்தனி யேனென்றென்னை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத்
தாய்பின்னை ஒற்றியெல்லாஞ்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப
மேய சுடர்வண்ணனே.  9
உந்திநின் றாருன்றன் ஓலக்கச்
சூளைகள் வாய்தல்பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவ
ரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு
மாலும் மதிற்கச்சியாய்
இந்தநின் றோமினி எங்ஙன
மோவந் திறைஞ்சுவதே.  10
05.047:
பண்டு செய்த
பழவினை யின்பயன்
கண்டுங் கண்டுங்
களித்திகாண் நெஞ்சமே
வண்டு லாமலர்ச்
செஞ்சடை யேகம்பன்
தொண்ட னாய்த்திரி
யாய்துயர் தீரவே.  1
நச்சி நாளும்
நயந்தடி யார்தொழ
இச்சை யாலுமை
நங்கை வழிபடக்
கொச்சை யார்குறு
கார்செறி தீம்பொழிற்
கச்சி யேகம்ப
மேகை தொழுமினே.  2
ஊனி லாவி
இயங்கி உலகெலாம்
தானு லாவிய
தன்மைய ராகிலும்
வானு லாவிய
பாணி பிறங்கவெங்
கானி லாடுவர்
கச்சியே கம்பரே.  3
இமையா முக்கணர்
என்னெஞ்சத் துள்ளவர்
தமையா ரும்மறி
வொண்ணாத் தகைமையர்
இமையோ ரேத்த
இருந்தவன் ஏகம்பன்
நமையா ளும்மவ
னைத்தொழு மின்களே.  4
மருந்தி னோடுநற்
சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்றெனக்
காயவெம் புண்ணியன்
கருந்த டங்கண்ணி
னாளுமை கைதொழ
இருந்த வன்கச்சி
ஏகம்பத் தெந்தையே.  5
பொருளி னோடுநற்
சுற்றமும் பற்றிலர்க்
கருளும் நன்மைதந்
தாய அரும்பொருள்
சுருள்கொள் செஞ்சடை
யான்கச்சி யேகம்பம்
இருள்கெடச் சென்று
கைதொழு தேத்துமே.  6
மூக்கு வாய்செவி
கண்ணுட லாகிவந்
தாக்கும் ஐவர்தம்
ஆப்பை அவிழ்த்தருள்
நோக்கு வான்நமை
நோய்வினை வாராமே
காக்கும் நாயகன்
கச்சி யேகம்பனே.  7
பண்ணில் ஓசை
பழத்தினில் இன்சுவை
பெண்ணொ டாணென்று
பேசற் கரியவன்
வண்ண மில்லி
வடிவுவே றாயவன்
கண்ணி லுண்மணி
கச்சி யேகம்பனே.  8
திருவின் நாயகன்
செம்மலர் மேலயன்
வெருவ நீண்ட
விளங்கொளிச் சோதியான்
ஒருவ னாயுணர்
வாயுணர் வல்லதோர்
கருவுள் நாயகன்
கச்சி யேகம்பனே.  9
இடுகு நுண்ணிடை
ஏந்திள மென்முலை
வடிவின் மாதர்
திறம்மனம் வையன்மின்
பொடிகொள் மேனியன்
பூம்பொழிற் கச்சியுள்
அடிகள் எம்மை
அருந்துயர் தீர்ப்பரே.  10
இலங்கை வேந்தன்
இராவணன் சென்றுதன்
விலங்க லையெடுக்
கவ்விர லூன்றலுங்
கலங்கிக் கச்சியே
கம்பவோ வென்றலும்
நலங்கொள் செலவளித்
தானெங்கள் நாதனே.
05.048:
பூமே லானும்
பூமகள் கேள்வனும்
நாமே தேவ
ரெனாமை நடுக்குறத்
தீமே வும்முரு
வாதிரு வேகம்பா
ஆமோ அல்லற்
படவடி யோங்களே.  1
அருந்தி றல்அம
ரர்அயன் மாலொடு
திருந்த நின்று
வழிபடத் தேவியோ
டிருந்த வன்னெழி
லார்கச்சி யேகம்பம்
பொருந்தச் சென்று
புடைபட் டெழுதுமே.  2
கறைகொள் கண்டத்தெண்
டோ ளிறை முக்கணன்
மறைகொள் நாவினன்
வானவர்க் காதியான்
உறையும் பூம்பொழில்
சூழ்கச்சி யேகம்பம்
முறைமை யாற்சென்று
முந்தித் தொழுதுமே.  3
பொறிப்பு லன்களைப்
போக்கறுத் துள்ளத்தை
நெறிப்ப டுத்து
நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு றும்மமு
தாயவன் ஏகம்பம்
குறிப்பி னாற்சென்று
கூடித் தொழுதுமே.  4
சிந்தை யுட்சிவ
மாய்நின்ற செம்மையோ
டந்தி யாய்அன
லாய்ப்புனல் வானமாய்
புந்தி யாய்ப்புகுந்
துள்ளம் நிறைந்தவெம்
எந்தை யேகம்பம்
ஏத்தித் தொழுமினே.  5
சாக்கி யத்தொடு
மற்றுஞ் சமண்படும்
பாக்கி யம்மிலார்
பாடு செலாதுறப்
பூக்கொள் சேவடி
யான்கச்சி யேகம்பம்
நாக்கொ டேத்தி
நயந்து தொழுதுமே.  6
மூப்பி னோடு
முனிவுறுத் தெந்தமை
ஆர்ப்ப தன்முன்
னணிஅம ரர்க்கிறை
காப்ப தாய
கடிபொழில் ஏகம்பம்
சேர்ப்ப தாகநாஞ்
சென்றடைந் துய்துமே.  7
ஆலு மாமயிற்
சாயல்நல் லாரொடுஞ்
சால நீயுறு
மால்தவிர் நெஞ்சமே
நீல மாமிடற்
றண்ணலே கம்பனார்
கோல மாமலர்ப்
பாதமே கும்பிடே.  8
பொய்ய னைத்தையும்
விட்டவர் புந்தியுள்
மெய்ய னைச்சுடர்
வெண்மழு வேந்திய
கைய னைக்கச்சி
யேகம்பம் மேவிய
ஐய னைத்தொழு
வார்க்கில்லை யல்லலே.  9
அரக்கன் றன்வலி
உன்னிக் கயிலையை
நெருக்கிச் சென்றெடுத்
தான்முடி தோள்நெரித்
திரக்க இன்னிசை
கேட்டவன் ஏகம்பந்
தருக்க தாகநாஞ்
சார்ந்து தொழுதுமே.  10
06.064:
கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண்
குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்
காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்
கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்
நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  1
பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்
பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்
தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த
மருந்தவன்காண் வையங்கள் பொறைதீர்ப் பான்காண்
மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா
திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  2
நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண்
நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில்
தோற்றவன்காண் தோற்றக்கே டில்லா தான்காண்
துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம்
போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண்
பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  3
தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத்
தத்துவன்காண் மலைமங்கை பங்கா வென்பார்
வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண்
வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணு ளோர்க்குஞ்
சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத்
திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம்
ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  4
அடுத்தானை யுரித்தான் காண் ... ...
... ... ... ...
இச்செய்யுளில் எஞ்சிய பாகம் சிதைந்து போயிற்று.  5
அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்
ஐயாறும் இடைமருதும் ஆள்வான் றான்காண்
பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள்
பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்
சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந்
தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  6
அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி
அழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப்
பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும்
பான்மையன்காண் பரவிநினைந் தெழுவார் தம்பால்
கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் றான்காண்
கடலில்விட முண்டமரர்க் கமுத மீய
இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  7
முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால்
வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்
பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்
பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி
முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்
முழங்கியுரு மெனத்தோன்று மழையாய் மின்னி
இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  8
வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்கு
வஞ்சகன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
வானகமும் மண்ணகமு மற்று மாகிப்
பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் றான்காண்
பங்கயத்தோன் றன்சிரத்தை யேந்தி யூரூர்
இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  9
வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண்
வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி
விம்மாநின் றழுவார்கட் களிப்பான் றான்காண்
விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத்
தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண்
அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற
எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  10
அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட
ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை
செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் றான்காண்
திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையிற்
பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து
பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோள் நாலஞ்
சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  11
06.065:
உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க
ஓங்காரத் தொருவன்காண் உணர்மெய்ஞ் ஞானம்
விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண்
வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே
தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்
திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  1
நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால்
இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்
கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே
குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை
வாசன்காண் மலைமங்கை பங்கன் றான்காண்
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும்
ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  2
பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும்
புண்ணியன்காண் நண்ணியபுண் டரிகப் போதின்
மறையவன்காண் மறையவனைப் பயந்தோன் றான்காண்
வார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப்
பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப்
பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும்
இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  3
பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண்
பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற
சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்
செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும்
பேரவன்காண் பேராயி ரங்க ளேத்தும்
பெரியவன்காண் அரியவன்காண் பெற்ற மூர்ந்த
ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  4
பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்
பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்
வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்
அருந்தவத்தாள் ஆயிழையாள் உமையாள் பாகம்
அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த
இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  5
ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்க மாறும்
அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை
காய்ந்தவன்காண் கண்ணழலாற் காம னாகங்
கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்
பாய்ந்தவன்காண் பண்டுபல சருகாற் பந்தர்
பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம்
ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  6
உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்
உகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண்
இமய வடகயிலைச் செல்வன் றான்காண்
இல்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந் தான்காண்
சமயமவை ஆறினுக்குந் தலைவன் றான்காண்
தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய
இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  7
தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் றான்காண்
தூமலர்ச்சே வடியிணையெஞ் சோதி யான்காண்
உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண்
ஒலிகடலி லமுதமரர்க் குதவி னான்காண்
வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்
வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்
எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  8
முந்தைகாண் மூவரினு முதலா னான்காண்
மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத்
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  9
பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் றான்காண்
பூதகண நாதன்காண் புலித்தோ லாடை
தன்னிசைய வைத்தவெழி லரவி னான்காண்
சங்கவெண் குழைக்காதிற் சதுரன் றான்காண்
மின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை
எடுக்கவடி அடர்ப்பமீண் டவன்றன் வாயில்
இன்னிசைகேட் டிலங்கொளிவாள் ஈந்தோன் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  10