Thursday, August 6, 2020

Vaidyanatha Swamy Temple, Thirumazhapadi – Sambandar Hymns

Vaidyanatha Swamy Temple, Thirumazhapadi – Sambandar Hymns
Sambandar (02.009):
களையும் வல்வினை யஞ்சல்நெஞ்
சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர்
மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய்
தான்மதுத் தும்பிவண்
டளையுங் கொன்றையந் தார்மழ
பாடியுள் அண்ணலே.  1
காச்சி லாதபொன் நோக்குங்க
னவயி ரத்திரள்
ஆச்சி லாதப ளிங்கினன்
அஞ்சுமுன் ஆடினான்
பேச்சி னாலுமக் காவதென்
பேதைகாள் பேணுமின்
வாச்ச மாளிகை சூழ்மழ
பாடியை வாழ்த்துமே.  2
உரங்கெ டுப்பவன் உம்பர்க
ளாயவர் தங்களைப்
பரங்கெ டுப்பவன் நஞ்சையுண்
டுபக லோன்றனை
முரண்கெ டுப்பவன் முப்புரந்
தீயெழச் செற்றுமுன்
வரங்கொ டுப்பவன் மாமழ
பாடியுள் வள்ளலே.  3
பள்ள மார்சடை யிற்புடை
யேயடை யப்புனல்
வெள்ளம் ஆதரித் தான்விடை
யேறிய வேதியன்
வள்ளல் மாமழ பாடியுள்
மேயம ருந்தினை
உள்ளம் ஆதரி மின்வினை
யாயின ஓயவே.  4
தேனு லாமலர் கொண்டுமெய்த்
தேவர்கள் சித்தர்கள்
பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன்
ஆடிய பால்வணன்
வான நாடர்கள் கைதொழு
மாமழ பாடியெம்
கோனை நாடொறுங் கும்பிட
வேகுறி கூடுமே.  5
தெரிந்த வன்புரம் மூன்றுடன்
மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழு வாரவர்
தம்மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை யொன்றுடை
யான்மழ பாடியைப்
புரிந்து கைதொழு மின்வினை
யாயின போகுமே.  6
சந்த வார்குழ லாளுமை
தன்னொரு கூறுடை
எந்தை யான்இமை யாதமுக்
கண்ணினன் எம்பிரான்
மைந்தன் வார்பொழில் சூழ்மழ
பாடிம ருந்தினைச்
சிந்தி யாவெழு வார்வினை
யாயின தேயுமே.  7
இரக்கம் ஒன்றுமி லான்
இறையான்திரு மாமலை
உரக்கை யாலெடுத் தான்தன
தொண்முடி பத்திற
விரல்த லைந்நிறு வியுமை
யாளொடு மேயவன்
வரத்தை யேகொடுக் கும்மழ
பாடியுள் வள்ளலே.  8
ஆலம் உண்டமு தம்மம
ரர்க்கருள் அண்ணலார்
காலன் ஆருயிர் வீட்டிய
மாமணி கண்டனார்
சால நல்லடி யார்தவத்
தார்களுஞ் சார்விடம்
மால யன்வணங் கும்மழ
பாடியெம் மைந்தனே.  9
கலியின் வல்லம ணுங்கருஞ்
சாக்கியப் பேய்களும்
நலியும் நாள்கெடுத் தாண்டஎன்
நாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழ
வும்பல வோசையும்
மலியும் மாமழ பாடியை
வாழ்த்திவ ணங்குமே.  10
மலியு மாளிகை சூழ்மழ
பாடியுள் வள்ளலைக்
கலிசெய் மாமதில் சூழ்கடற்
காழிக் கவுணியன்
………………………………………………………………….
………………………………………………………………….
இப்பதிகத்தின் 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைந்து போயிற்று.
Sambandar (03.028):
காலையார் வண்டினங்
கிண்டிய காருறுஞ்
சோலையார் பைங்கிளி
சொற்பொருள் பயிலவே
வேலையார் விடமணி
வேதியன் விரும்பிடம்
மாலையார் மதிதவழ்
மாமழ பாடியே.  1
கறையணி மிடறுடைக்
கண்ணுதல் நண்ணிய
பிறையணி செஞ்சடைப்
பிஞ்ஞகன் பேணுமூர்
துறையணி குருகினந்
தூமலர் துதையவே
மறையணி நாவினான்
மாமழ பாடியே.  2
அந்தணர் வேள்வியும்
அருமறைத் துழனியுஞ்
செந்தமிழ்க் கீதமுஞ்
சீரினால் வளர்தரப்
பந்தணை மெல்விர
லாளொடும் பயில்விடம்
மந்தம்வந் துலவுசீர்
மாமழ பாடியே.  3
அத்தியின் உரிதனை
யழகுறப் போர்த்தவன்
முத்தியாய் மூவரின்
முதல்வனாய் நின்றவன்
பத்தியாற் பாடிடப்
பரிந்தவர்க் கருள்செயும்
அத்தனார் உறைவிடம்
அணிமழ பாடியே.  4
கங்கையார் சடையிடைக்
கதிர்மதி யணிந்தவன்
வெங்கண்வா ளரவுடை
வேதியன் தீதிலாச்
செங்கயற் கண்ணுமை
யாளொடுஞ் சேர்விடம்
மங்கைமார் நடம்பயில்
மாமழ பாடியே.  5
பாலனா ராருயிர்
பாங்கினால் உணவருங்
காலனார் உயிர்செகக்
காலினாற் சாடினான்
சேலினார் கண்ணினாள்
தன்னொடுஞ் சேர்விடம்
மாலினார் வழிபடு
மாமழ பாடியே.  6
விண்ணிலார் இமையவர்
மெய்ம்மகிழ்ந் தேத்தவே
எண்ணிலார் முப்புரம்
எரியுண நகைசெய்தார்
கண்ணினாற் காமனைக்
கனலெழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம்
அணிமழ பாடியே.  7
கரத்தினாற் கயிலையை
எடுத்தகார் அரக்கன
சிரத்தினை யூன்றலுஞ்
சிவனடி சரண்எனா
இரத்தினாற் கைந்நரம்
பெடுத்திசை பாடலும்
வரத்தினான் மருவிடம்
மாமழ பாடியே.  8
ஏடுலா மலர்மிசை
அயனெழில் மாலுமாய்
நாடினார்க் கரியசீர்
நாதனார் உறைவிடம்
பாடெலாம் பெண்ணையின்
பழம்விழப் பைம்பொழில்
மாடெலாம் மல்குசீர்
மாமழ பாடியே.  9
உறிபிடித் தூத்தைவாய்ச்
சமணொடு சாக்கியர்
நெறிபிடித் தறிவிலா
நீசர்சொற் கொள்ளன்மின்
பொறிபிடித் தரவினம்
பூணெனக் கொண்டுமான்
மறிபிடித் தானிடம்
மாமழ பாடியே.  10
ஞாலத்தார் ஆதிரை
நாளினான் நாடொறுஞ்
சீலத்தான் மேவிய
திருமழ பாடியை
ஞாலத்தான் மிக்கசீர்
ஞானசம் பந்தன்சொல்
கோலத்தாற் பாடுவார்
குற்றமற் றார்களே.  11
Sambandar (03.048):
அங்கை யாரழ
லன்னழ கார்சடைக்
கங்கை யான்கட
வுள்ளிட மேவிய
மங்கை யானுறை
யும்மழ பாடியைத்
தங்கை யாற்றொழு
வார்தக வாளரே.  1
விதியு மாம்விளை
வாமொளி யார்ந்ததோர்
கதியு மாங்கசி
வாம்வசி யாற்றமா
மதியு மாம்வலி
யாம்மழ பாடியுள்
நதியந் தோய்சடை
நாதன்நற் பாதமே.  2
முழவி னான்முது
காடுறை பேய்க்கணக்
குழுவி னான்குல
வுங்கையி லேந்திய
மழுவி னானுறை
யும்மழ பாடியைத்
தொழுமின் நுந்துய
ரானவை தீரவே.  3
கலையி னான்மறை
யான்கதி யாகிய
மலையி னான்மரு
வார்புர மூன்றெய்த
சிலையி னான்சேர்
திருமழ பாடியைத்
தலையி னால்வணங்
கத்தவ மாகுமே.  4
நல்வி னைப்பயன்
நான்மறை யின்பொருள்
கல்வி யாயக
ருத்தன் உருத்திரன்
செல்வன் மேய
திருமழ பாடியைப்
புல்கி யேத்தும்
அதுபுக ழாகுமே.  5
நீடி னாருல
குக்குயி ராய்நின்றான்
ஆடி னானெரி
கானிடை மாநடம்
பாடி னாரிசை
மாமழ பாடியை
நாடி னார்க்கில்லை
நல்குர வானவே.  6
மின்னி னாரிடை
யாளொரு பாகமாய்
மன்னி னானுறை
மாமழ பாடியைப்
பன்னி னாரிசை
யால்வழி பாடுசெய்
துன்னி னார்வினை
யாயின வோயுமே.  7
தென்னி லங்கையர்
மன்னன் செழுவரை
தன்னி லங்க
அடர்த்தருள் செய்தவன்
மன்னி லங்கிய
மாமழ பாடியை
உன்னி லங்க
வுறுபிணி யில்லையே.  8
திருவின் நாயக
னுஞ்செழுந் தாமரை
மருவி னானுந்
தொழத்தழல் மாண்பமர்
உருவி னானுறை
யும்மழ பாடியைப்
பரவி னார்வினைப்
பற்றறுப் பார்களே.  9
நலியும் நன்றறி
யாச்சமண் சாக்கியர்
வலிய சொல்லினும்
மாமழ பாடியுள்
ஒலிசெய் வார்கழ
லான்திறம் உள்கவே
மெலியும் நம்முடன்
மேல்வினை யானவே.  10
மந்தம் உந்து
பொழில்மழ பாடியுள்
எந்தை சந்தம்
இனிதுகந் தேத்துவான்
கந்த மார்கடற்
காழியுள் ஞானசம்
பந்தன் மாலைவல்
லார்க்கில்லை பாவமே.  11