Monday, October 18, 2021

Sakshinatheswarar Temple, Thiruppurambiyam – Sundarar Hymns

Sakshinatheswarar Temple, Thiruppurambiyam – Sundarar Hymns

07.035:

அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி

நின்றும்போந்துவந் தின்னம்பர்த்

தங்கினோமையும் இன்னதென்றிலர்

ஈசனாரெழு நெஞ்சமே

கங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள்

ஏத்திவானவர் தாந்தொழும்

பொங்குமால்விடை யேறிசெல்வப்

புறம்பயந்தொழப் போதுமே.  1

பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும்

பண்டையாரலர் பெண்டிரும்

நிதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும்

நினைப்பொழிமட நெஞ்சமே

மதியஞ்சேர்சடைக் கங்கையானிடம்

மகிழும்மல்லிகை செண்பகம்

புதியபூமலர்ந் தெல்லிநாறும்

புறம்பயந்தொழப் போதுமே.  2

புறந்திரைந்து நரம்பெழுந்து

நரைத்துநீயுரை யாற்றளர்ந்

தறம்புரிந்து நினைப்பதாண்மை

அரிதுகாண்இஃ தறிதியேல்

திறம்பியாதெழு நெஞ்சமேசிறு

காலைநாமுறு வாணியம்

புறம்பயத்துறை பூதநாதன்

புறம்பயந்தொழப் போதுமே.  3

குற்றொருவரைக் கூறைகொண்டு

கொலைகள்சூழ்ந்த களவெலாஞ்

செற்றொருவரைச் செய்ததீமைகள்

இம்மையேவருந் திண்ணமே

மற்றொருவரைப் பற்றிலேன்மற

வாதெழுமட நெஞ்சமே

புற்றரவுடைப் பெற்றமேறி

புறம்பயந்தொழப் போதுமே.  4

கள்ளிநீசெய்த தீமையுள்ளன

பாவமும்பறை யும்படி

தெள்ளிதாவெழு நெஞ்சமேசெங்கண்

சேவுடைச்சிவ லோகனூர்

துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல்

தோன்றுதாமரைப் பூக்கள்மேல்

புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும்

புறம்பயந்தொழப் போதுமே.  5

படையெலாம்பக டாரஆளிலும்

பௌவஞ்சூழ்ந்தர சாளிலுங்

கடையெலாம்பிணைத் தேரைவால்கவ

லாதெழுமட நெஞ்சமே

மடையெலாங்கழு நீர்மலர்ந்து

மருங்கெலாங்கரும் பாடத்தேன்

புடையெலாம்மணம் நாறுசோலைப்

புறம்பயந்தொழப் போதுமே.  6

முன்னைச்செய்வினை இம்மையில்வந்து

மூடுமாதலின் முன்னமே

என்னைநீதியக் காதெழுமட

நெஞ்சமேயெந்தை தந்தையூர்

அன்னச்சேவலோ டூடிப்பேடைகள்

கூடிச்சேரு மணிபொழிற்

புன்னைக்கன்னி கழிக்கணாறும்

புறம்பயந்தொழப் போதுமே.  7

மலமெலாமறும் இம்மையேமறு

மைக்கும்வல்வினை சார்கிலா

சலமெலாமொழி நெஞ்சமேயெங்கள்

சங்கரன்வந்து தங்குமூர்

கலமெலாங்கடல் மண்டுகாவிரி

நங்கையாடிய கங்கைநீர்

புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும்

புறம்பயந்தொழப் போதுமே.  8

பண்டரியன செய்ததீமையும்

பாவமும்பறை யும்படி

கண்டரியன கேட்டியேற்கவ

லாதெழுமட நெஞ்சமே

தொண்டரியன பாடித்துள்ளிநின்

றாடிவானவர்தாந் தொழும்

புண்டரீக மலரும்பொய்கைப்

புறம்பயந்தொழப் போதுமே.  9

துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந்

துயக்கறாத மயக்கிவை

அஞ்சிஊரன் திருப்புறம்பயத்

தப்பனைத்தமிழ்ச் சீரினால்

நெஞ்சினாலே புறம்பயந்தொழு

துய்துமென்று நினைத்தன

வஞ்சியாதுரை செய்யவல்லவர்

வல்லவானுல காள்வரே.  10