Monday, October 4, 2021

Thirumayanam Brahmapureeswarar Temple, Thirukkadaiyur – Sundarar Hymns

Thirumayanam Brahmapureeswarar Temple, Thirukkadaiyur – Sundarar Hymns

07.053:

மருவார் கொன்றை மதிசூடி

மாணிக் கத்தின் மலைபோல

வருவார் விடைமேல் மாதோடு

மகிழ்ந்து பூதப் படைசூழத்

திருமால் பிரமன் இந்திரற்குந்

தேவர் நாகர் தானவர்க்கும்

பெருமான் கடவூர் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.  1

விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்

மார்பர் வேத கீதத்தர்

கண்ணார் நுதலர் நகுதலையர்

கால காலர் கடவூரர்

எண்ணார் புரமூன் றெரிசெய்த

இறைவ ருமையோ ரொருபாகம்

பெண்ணா ணாவர் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.  2

காயும் புலியின் அதளுடையர்

கண்டர் எண்டோட் கடவூரர்

தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்

தாமே யாய தலைவனார்

பாயும் விடையொன் றதுவேறிப்

பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி

பேய்கள் வாழும் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.  3

நறைசேர் மலரைங் கணையானை

நயனத் தீயாற் பொடிசெய்த

இறையா ராவர் எல்லார்க்கும்

இல்லை யென்னா தருள்செய்வார்

பறையார் முழவம் பாட்டோடு

பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்

பிறையார் சடையார் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.  4

கொத்தார் கொன்றை மதிசூடிக்

கோள்நா கங்கள் பூணாக

மத்த யானை உரிபோர்த்து

மருப்பும் ஆமைத் தாலியார்

பத்தி செய்து பாரிடங்கள்

பாடி ஆடப் பலிகொள்ளும்

பித்தர் கடவூர் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.  5

துணிவார் கீளுங் கோவணமுந்

துதைந்து சுடலைப் பொடியணிந்து

பணிமே லிட்ட பாசுபதர்

பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்

திணிவார் குழையார் புரமூன்றுந்

தீவாய்ப் படுத்த சேவகனார்

பிணிவார் சடையார் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.  6

காரார் கடலின் நஞ்சுண்ட

கண்டர் கடவூர் உறைவாணர்

தேரார் அரக்கன் போய்வீழ்ந்து

சிதைய விரலா லூன்றினார்

ஊர்தான் ஆவ துலகேழும்

உடையார்க் கொற்றி யூராரூர்

பேரா யிரவர் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.  7

வாடா முலையாள் தன்னோடும்

மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்

கோடார் கேழற் பின்சென்று

குறுகி விசயன் தவமழித்து

நாடா வண்ணஞ் செருச்செய்து

ஆவ நாழி நிலையருள்செய்

பீடார் சடையார் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.  8

வேழம் உரிப்பர் மழுவாளர்

வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்

ஆழி அளிப்பர் அரிதனக்கன்

றானஞ் சுகப்பர் அறமுரைப்பர்

ஏழைத் தலைவர் கடவூரில்

இறைவர் சிறுமான் மறிக்கையர்

பேழைச் சடையர் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.  9

மாட மல்கு கடவூரில்

மறையோ ரேத்தும் மயானத்துப்

பீடை தீர அடியாருக்

கருளும் பெருமா னடிகள்சீர்

நாடி நாவ லாரூரன்

நம்பி சொன்ன நற்றமிழ்கள்

பாடு மடியார் கேட்பார்மேற்

பாவ மான பறையுமே.  10