Monday, October 4, 2021

Ukthavedeeswarar Temple, Kuthalam – Appar Hymns

Ukthavedeeswarar Temple, Kuthalam – Appar Hymns

04.042:

பொருத்திய குரம்பை தன்னைப்

பொருளெனக் கருத வேண்டா

இருத்தியெப் பொழுதும் நெஞ்சுள்

இறைவனை ஏத்து மின்கள்

ஒருத்தியைப் பாகம் வைத்தங்

கொருத்தியைச் சடையில் வைத்த

துருத்தியஞ் சுடரி னானைத்

தொண்டனேன் கண்ட வாறே.  1

சவைதனைச் செய்து வாழ்வான்

சலத்துளே யழுந்து கின்ற

இவையொரு பொருளு மல்ல

இறைவனை ஏத்து மின்னோ

அவைபுர மூன்றும் எய்தும்

அடியவர்க் கருளிச் செய்த

சுவையினைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.  2

உன்னியெப் போதும் நெஞ்சுள்

ஒருவனை ஏத்து மின்னோ

கன்னியை ஒருபால் வைத்துக்

கங்கையைச் சடையுள் வைத்துப்

பொன்னியின் நடுவு தன்னுள்

பூம்புனல் பொலிந்து தோன்றுந்

துன்னிய துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.  3

ஊன்றலை வலிய னாகி

உலகத்துள் உயிர்கட் கெல்லாந்

தான்றலைப் பட்டு நின்று

சார்கன லகத்து வீழ

வான்றலைத் தேவர் கூடி

வானவர்க் கிறைவா வென்னுந்

தோன்றலைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.  4

உடல்தனைக் கழிக்க லுற்ற

உலகத்துள் உயிர்கட் கெல்லாம்

இடர்தனைக் கழிக்க வேண்டில்

இறைவனை ஏத்து மின்னோ

கடல்தனில் நஞ்ச முண்டு

காண்பரி தாகி நின்ற

சுடர்தனைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.  5

அள்ளலைக் கடக்க வேண்டில்

அரனையே நினைமி னீர்கள்

பொள்ளலிக் காயந் தன்னுட்

புண்டரீ கத்தி ருந்த

வள்ளலை வான வர்க்குங்

காண்பரி தாகி நின்ற

துள்ளலைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.  6

பாதியில் உமையாள் தன்னைப்

பாகமா வைத்த பண்பன்

வேதியன் என்று சொல்லி

விண்ணவர் விரும்பி ஏத்தச்

சாதியாஞ் சதுர்மு கனுஞ்

சக்கரத் தானுங் காணாச்

சோதியைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.  7

சாமனை வாழ்க்கை யான

சலத்துளே யழுந்த வேண்டா

தூமநல் லகிலுங் காட்டித்

தொழுதடி வணங்கு மின்னோ

சோமனைச் சடையுள் வைத்துத்

தொன்னெறி பலவுங் காட்டுந்

தூமனத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.  8

குண்டரே சமணர் புத்தர்

குறியறி யாது நின்று

கண்டதே கருது வார்கள்

கருத்தெண்ணா தொழிமி னீர்கள்

விண்டவர் புரங்கள் எய்து

விண்ணவர்க் கருள்கள் செய்த

தொண்டர்கள் துணையி னானைத்

துருத்திநான் கண்ட வாறே.  9

பிண்டத்தைக் கழிக்க வேண்டிற்

பிரானையே பிதற்று மின்கள்

அண்டத்தைக் கழிய நீண்ட

அடலரக் கன்றன் ஆண்மை

கண்டொத்துக் கால்வி ரலால்

ஊன்றிமீண் டருளிச் செய்த

துண்டத்துத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.